11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில், கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி : நாடு முழுவதும் 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், அரியானா, குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள சூழலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

நீர்நிலைகள், உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், பறவை விற்பனை சந்தைகளை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான கண்காணிப்பை அதிகரிக்கவும், உயிரிழந்த பறவைகளை உரிய முறையில் அப்புறப்படுத்தி, கோழிப் பண்ணைகளில் உயிரி பாதுகாப்பை வலுப்படுத்தவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கோழி, வாத்து, காகம் உள்ளிட்ட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் எனப்படும் அவியன் இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க திறம்பட செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ‘அவியன் இன்ஃபுளுயன்சா 70 டிகிரி வெப்பநிலையில் அழிந்து விடும். நன்றாக சமைக்கப்பட்ட நிலையில் இறைச்சி, முட்டைகளை மக்கள் உட்கொள்ளலாம். பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம். பறவை காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் கோழி சந்தைகளை மூடவோ, விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவோ தேவையில்லை. பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் பீதியைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

நோய்த்தொற்று இல்லாத பகுதிகள், மாநிலங்களில் கோழி தீவினங்கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். சில மாநிலங்கள் விதித்துள்ள தடையால் கோழி மற்றும் முட்டை வர்த்தகம் மோசமாக பாதித்துள்ளது.

மக்காச்சோள விவசாயிகளையும் பாதித்துள்ளது. எனவே கோழி மற்றும் கோழி தீவன பொருட்களை விற்பனை செய்யும் தடை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பறவைக் காய்ச்சலின் பாதிப்பானது, மனிதர்களைப் பாதிக்காது. இருப்பினும், இந்த நோய் பாதிக்கப்பட்ட பறவையின் எச்சம், மூக்கு, வாய் வழியாக தொற்று பரவக்கூடும். கோழி போன்றவற்றின் இறைச்சி உணவை முழுமையாக நன்றாக வேகவைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: