இனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம் : 8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

புதுடெல்லி: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவடியா பகுதியில், நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி இதை திறந்து வைத்தார். ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படும் இச்சிலை, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. இதை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற, பிரதமர் மோடி பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்.

படகு போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, நீர்வழி விமான சேவை என படிப்படியாக இதற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கெவடியாவுக்கு என்றே, இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பசுமை ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கெவடியாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 8 புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், காணொலி மூலமாக இன்று இந்த ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுவதால், அதன் பக்கவாட்டு பகுதிகளும், மேற்கூரைகளிலும் வெளியே இருப்பதை பார்க்கும் வகையில் கண்ணாடி இழை தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணத்தின் போதே, இதன் மூலமாக ஒற்றுமை சிலையையும், அதை சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: