கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை: விஞ்ஞானிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு

டெல்லி : கொவிட்-19 க்கு எதிராக  உலகளவில் மிகப்பெரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஓர் முக்கிய கட்டத்தை இந்தியா கடந்துள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் அபரிமிதமான செயல்திறனையும், நமது தலைமையின் ஆற்றலையும் உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் திட்டம் உணர்த்துகின்றது.

“மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் பாதையில் வெற்றி அடைந்துள்ள மிகச்சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்த தனித்துவமான சாதனையை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சர்வதேச அரங்கில் தற்சார்பு இந்தியாவிற்கான புதிய உச்சம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரு நரேந்திர மோடியால் வழிநடத்தப்படும் ‘புதிய இந்தியா’, பேரிடர்களை வாய்ப்புகளாகவும், சவால்களை சாதனைகளாகவும் மாற்றும் இந்தியா என்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தினத்தில் அனைத்து போராளிகளுக்கும் தமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள திரு அமித் ஷா, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி, தற்சார்பு இந்தியா உறுதிப்பாடின் சான்றாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: