திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம், முனியாண்டி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் வைத்திருப்பவர்கள் கூடி, அசைவ அன்னதான திருவிழா நடத்துவது வழக்கம். நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை முன்னிட்டு, இத்திருவிழா களை கட்டியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர். மாலையில் நூற்றுக்கணக்கானோர் பூ, பழம், தேங்காய் அடங்கிய மலர் தட்டுகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி 100 ஆடுகள், 50 சேவல்கள் வெட்டப்பட்டு, 100 மூட்டை அரிசியில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. திருவிழாவில் பங்கேற்ற உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் என அனைத்து பக்தர்களுக்கும் சுடச்சுட சுவையான அசைவு உணவு பரிமாறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.