கொழும்பு: இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை அமைப்பை, குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயத்தோடு நியமிக்க புதிய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிடம் இலங்கை தமிழ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்க்குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும் என ஐநா.வில் கடந்த 2015, 2017 மற்றும் 2019ல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையின் அன்றயை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தலைமையிலான அரசு ஒப்புக் கொண்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அப்போது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார். அதன்பின், ஐநா தீர்மான ஆதரவில் இருந்து இலங்கை வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.