புதுடெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட வேளாண் நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றும்படி, உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய க்கோரி 50 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.இதனிடையே, வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க பூபிந்தர் சிங் மன், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி, அனில் கன்வாத் அடங்கிய குழுவை நியமித்தது. இவர்கள் ஏற்கனவே, மத்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் என்பதால், விவசாயிகள் இந்த குழுவை புறக்கணித்தனர். இதில், பூபிந்தர் சிங் இந்த குழுவில் இருந்து தாமாக விலகி கொண்டார்.