×

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் அதிமுகவே களமிறங்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்களுக்கு போட்டியிட இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில்  அதிமுகவே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே தமிழக சட்டசபை தேர்தலிலும் மீண்டும் கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இந்த கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் சிக்கல் எழுந்துள்ளது.  

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் அதிமுக தலைமை ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜ தலைவர்கள் தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளை மேற்கோள் காட்டி, இந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறைமுகமாக டெல்லி தலைமை மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது. அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மூன்று நாட்களுக்கு முன் சென்னை வந்தபோது, தமிழகத்தில் பாஜவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடைவதாக நினைத்து, அதிமுக அதிருப்தி தலைவர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக தமிழக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் ஒருவர். இவருக்கு பாஜ தலைவர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதேபோன்று வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக மேயர் கார்த்தியாயினி உள்ளிட்டோரும் பாஜவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இவர்களுக்கு எதிராக அதிமுக மாவட்ட தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா அல்லது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதேநேரம் பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன் முன்னிறுத்தப்பட்டால், அந்த தொகுதி தங்களுக்கு கிடைக்காமல் போகும் என்று கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் அதிமுக - பாஜ இடையே நெல்லை மாவட்டத்தில் சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள்.  

வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி சீட்  கேட்டு வருகிறாராம். அவருக்கு கொடுக்கக் கூடாது என்று தற்போதைய அமைச்சர் வீரமணி கூறுகிறாராம். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று, பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சி சார்பில் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய வாய்ப்பு பறிபோகும் என்று கருதுகிறார்கள்.
அதேபோன்று, தற்போது கன்னியாகுமரி எம்பி தொகுதியில்  போட்டியிட்டு வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி  காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் ஏற்கனவே, பாஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அங்கு வரும் சட்டமன்ற தேர்தலுடன் எம்பி தேர்தலுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஆனால், கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தமிழக டெல்லி பிரதிநிதியாக உள்ள தளவாய்சுந்தரம் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனால், பாஜ - அதிமுக இடையே கூட்டணியில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் வருகின்ற நாளில் அதிமுக - பாஜ கூட்டணியில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


* நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா அல்லது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
* வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி சீட் கேட்டு வருகிறாராம். அவருக்கு கொடுக்கக் கூடாது என்று தற்போதைய அமைச்சர் வீரமணி கூறுகிறாராம்.
* கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
* ஆனால், கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தமிழக டெல்லி பிரதிநிதியாக உள்ள தளவாய்சுந்தரம் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : AIADMK , AIADMK loses to AIADMK in Kanyakumari bypolls
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...