சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழா நாட்களில் மெட்ரோ ரயிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள். கோயம்பேடு, கிண்டி, சென்ட்ரல், எழும்பூர் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. நாள் தோறும் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே மெட்ரோவில் பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில், சனி, ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண தள்ளுபடி அளித்ததன் மூலமாகவும் மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தது. அந்தவகையில், நாள் தோறும் மெட்ரோ ரயில் சேவையை நாள் தோறும் 35 ஆயிரம் பேர் வரை பயன்படுத்தி வந்தனர். தற்போது, பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.