புதுடெல்லி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த மக்களவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே சின்னத்தை சட்டப்பேரவை தேர்தலிலும் ஒதுக்க அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தது. ஆனால், கடந்த மாதம் 14ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்திற்கு பதிலாக எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்தது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடலாம் என தெரிவித்தது.