சீன ராணுவத்துடன் தொடர்பு: ஜியோமி உட்பட 9 நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: முதலீடுகளை திரும்ப பெற அமெரிக்கா கெடு

ஹாங்காங்: சீனாவின் ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியில் சேர்த்துள்ளது.  அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அரசியல், பொருளாதாரம், எல்லை விவகாரம், தென் சீன கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகின்றது. இதன் காரணமாக சீனாவின் மீது அமெரிக்கா பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் தடை விதித்து வருகின்றது.  இந்நிலையில், சீனாவுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக கூறி 60 சீன நிறுவனங்களை கடந்த டிசம்பரில் அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், சீனாவின் டிரோன் தயாரிப்பு நிறுவனமான டிஜேஐ , எஸ்எம்ஐசி உள்ளிட்டவை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் பதவியில் இருந்தபோது அதிபர் டிரம்ப் சீனாவின் மீது அழுத்தம் ெகாடுக்கும் வகையில் சீனாவின் ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்களின் பெயர்கள் ராணுவ கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 இதன்படி, ஜியோமி கார்ப், விமான தயாரிப்பாளரான வர்த்தக ஏர்கிராப்ட் கார்ப். உள்ளிட்ட சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ராணுவத்தின் கருப்பு பட்டியலில் இருக்கும் சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை இந்த ஆண்டு நவம்பருக்குள் திரும்ப  பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் கருப்பு பட்டியில் ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே சேர்க்கப்பட்டதோடு, அவற்றின் செல்போன்கள் கூகுள் செயல்பாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஜியோமியின் சந்தை பங்குகள் 2020ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உயர்ந்து இருந்தது. இந்நிலையில், கருப்பு பட்டியலில் சீனாவின் ஜியோமியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனமும் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இதுமட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெறாவிட்டால்  தொழில்நுட்பம் மற்றும் பிற விவகாரங்களில் ஈடுபட முடியாதபடி  தடை செய்யும் பொருளாதார கருப்பு பட்டியலில்  சீனாவின் தேசிய ஆயில் கார்ப். நிறுவனம் மற்றும் ஸ்கைரிசான் உள்ளிட்டவற்றை வர்த்தக துறை ேசர்த்துள்ளது. சீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான தேசிய ஆயில் கார்ப் நிறுவனம் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இங்கு ஏற்கனவே வியட்நாம், பிலிப்பைன்ஸ், ப்ரூனே, தைவான், மலேசியா உள்ளிட்டவை உரிமை கோரல்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: