சென்னை: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளுக்கென தனியாக ஒரு இருக்கை தொடங்கப்படும் என்று அப்பல்லைக் கழக துணைவேந்தர் தெரிவித்தார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலமும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நேற்று திருவள்ளுவர் விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் 12 நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பார்த்தசாரதி பேசியதாவது: திருக்குறள் தலை சிறந்த வாழ்வியல் நூல். கல்வி மேலாண்மை, வேளாண்மை, தத்துவம், உளவியல் என்று அனைத்து துறையினருக்கும் பொருந்துகின்ற வகையில் நுட்பமான கருத்துகளை வள்ளுவர் அதில் தெரிவித்துள்ளார்.