3,006 மையங்களில் நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி ட்விட்..!

டெல்லி: நாடு முழுவதும் நாளை காலை 10:30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது . அதேபோல கொரோனாவுக்கு அதிக பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். மதுரையில் ஜனவரி 16ம் தேதி  தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் வரும் 16-ம் தேதி உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம் இந்தியாவில் தொடங்க உள்ளது.

இதனையடுத்து, நாளை காலை 10.30 மணிக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி நபர்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: