மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம்: எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்: கமல்ஹாசன் ட்விட்..!

சென்னை: மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய  மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது . சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் அவரவர்கள் கேட்ட சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கீடு செய்தது.  ஆனால், கமல் தனது மக்கள் நீதி மய்யத்திற்கு கேட்ட டார்ச் சின்னத்தை, புதுச்சேரிக்கு மட்டும் ஒதுக்கி விட்டு தமிழகத்தில் ஒதுக்கவில்லை. கமல்ஹாசன் கேட்டிருந்த டார்ச் சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதனால், மக்கள் நீதி மய்யம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, கடந்த மக்களவை தேர்தலில் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தையே, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்கள்  கட்சிக்கு ஒதுக்க வேண்டும்,’ என தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் மீண்டும் முறையீடு செய்தது. இந்த நிலையில், டார்ச் லைட் சின்னத்தை மொழிந்த கட்சி, திடீரென அந்த சின்னத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது.

இந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது: மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய  மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: