பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!!

மதுரை: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. மதுரையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் விரிவான கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 651 மாடுபிடி வீரர்கள், 800 காளைகள் களம் காண இருந்தன. ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு கார், கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். 17 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் பிரபாகரன் 2-வது இடம் பிடித்துள்ளார். இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 674 காளைகள் அவிழ்க்கப்பட்டது. இந்த நிலையில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்தி கூறுகையில் இது எனது வெற்றி அல்ல, நம் எல்லோருடைய வெற்றி என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Related Stories: