×

ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம்: சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில்

சென்னை: அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆங்கிலம்  அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் என்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்த வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) சந்தோஷ் குமார் கமிலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிக்கை கடந்த 4ம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான தேர்வுகள் பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

ஏற்கெனவே தபால்காரர் பதவிக்கான பணி நியமனத் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுமென்று கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்திருந்ததையும், கடந்த ஆண்டு ஜுலை 30ம் தேதி  அன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசு இது போன்ற உறுதி மொழி அளித்ததையும் குறிப்பிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கணக்கர் பதவிகளுக்கான தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் சி.பி.எம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்று அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் (ஊழியர் நலன்) சந்தோஷ் குமார் கமிலா சு.வெங்கடேசன் எம்.பிக்கு நேற்று 14ம் (தேதி) பதில் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர்  தேர்வுகள் தொடர்பான கடந்த 4ம் தேதி அறிவிக்கைக்கு பின்னிணைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த மையப்படுத்தப்படாத துறைவாரியத் தேர்வுகளை ஆங்கிலம், இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்ற தெரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பின்னிணைப்பை இக் கடிதத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். நீங்கள் வெளிப்படுத்திய கவலைகள் இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என நம்புகிறேன்.

மேலும் இது குறித்து சு.வெங்கடேசன் கருத்து கூறுகையில்: எனது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய கோரிக்கையால் தமிழில் தேர்வுகள் நடைபெறுவது தேர்வர்களுக்கு ஒரு ”சமதள ஆடு களத்தை” ஏற்படுத்தித் தருவதாகும். மேலும் அந்தந்த மாநிலங்களில் மக்களுக்கு சேவை ஆற்றுபவர்களுக்கு மாநில மொழிகளில் தேர்ச்சி என்பதே முக்கியம். அதுவே மக்களுக்கான சேவையையும் வலுப்படுத்த உதவும். இன்னும் கூடுதலாக சொல்வதானால் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக தமிழகம் என்றும் முன் வரிசையில் நிற்கும் என்பதையும் உறுதி செய்வதாகும். ஆகவே எல்லா மத்திய அரசுப் பணிகளிலும், மத்தியப் பொதுத் துறை நியமனங்களிலும் தமிழுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய எனது முயற்சிகள் இடையறாது தொடரும். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி கூறினார்.

Tags : S. Venkatesh ,Central Government , You can write in English, Hindi, Mail exams, Tamil too
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....