பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மை குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம்: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

சென்னை: தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக உலுக்கிக் கொண்டிருக்கிறது.சிபிஐயால் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம் அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை மாவட்ட அதிமுக பிரமுகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை உணர்த்த இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வெளிவந்ததை வேலுமணியோ, பொள்ளாச்சி ஜெயராமனோ மறுக்க முடியுமா?. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சி.பி.ஐ. விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார்.

“சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல” இவர் மகன் குற்றமற்றவர் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, மு.க. ஸ்டாலினை பதவி விலக சொல்வது என்பது, மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார். சி.பி.ஐ. விசாரணையில் குற்றம் புரிந்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி திமுக சட்டத்துறை மூலமாக வழக்கை மேற்கொண்டு நடத்தி, உண்மை குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: