பண்டிகை காலத்தில் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினம்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையை லண்டன் உலோக சந்தைதான் நிர்ணயம் செய்கிறது.

அதாவது, ஹெ.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கான விலை உலக சந்தையில் அதற்கு இருக்கும் மவுசின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மீண்டும் சரிந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த 8ம் தேதி திடீரென சவரனுக்கு 640 குறைந்தது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக 7 நாட்களில் சவரன் 1384 அளவுக்கு அதிகரித்தது. இதனால் சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது.

பொங்கல் திருநாள் மற்றும் வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 குறைந்து  ரூ.4,662-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீர் சரிவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: