உளவியல் உடல்நலம் அறிவோம்

நன்றி குங்குமம் தோழி

உடல், மனம் இரண்டும் சேர்ந்து தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தை பார்ப்பது போல உளவியல் பிரச்னைகளை பார்ப்பது இல்லை. மனசு சரி இல்லை என்றாலும் உடலில் பிரச்னை ஏற்படும், உடல் சரி இல்லை என்றாலும் மனதில் பிரச்னை ஏற்படும் என்பதுதான் இயற்கை. இவை இரண்டையும் பாதுகாப்பது நம்முடைய அடிப்படை கடமை. உடலை பாதுகாப்பது மூலம் எப்படி மனதை புத்துணர்வு பெறவைக்க முடியும் என்பதைப் பற்றி கூறுகிறார் மனநல ஆலோசகர் வந்தனா.

‘‘அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்தவர்களிடம் எப்படி உணர்கிறீர்கள் என்றால், புத்துணர்வோடு இருக்கிறேன் என்பார்கள். நரம்பியலில் உணர்வுகளை புத்துணர்ச்சி கொடுக்கும் ரசாயனம் உடற்பயிற்சி செய்வதால் உற்பத்தியாகும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உளவியல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அன்றாட வாழ்க்கையில் நம் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் மன ஆரோக்கியம் மேன்மை அடைகிறது.

நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் உறவுகளின் தரம் மற்றும் உணர்ச்சிகளை எப்படி கையாள்கிறீர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.பணிச்சுமை அல்லது வேறு ஏதேனும் பிரச்னையில் மனச்சோர்வு ஏற்படும் போது நம் மனதை ஆரோக்கிய முறையில் வழிநடத்தலாம். அன்புக்குறியவர்களிடம் தொலைபேசி மூலம் பேசுவது மற்றும் சோஷியல் நெட்ஒர்க் கூட ஒரு வகை கம்யூனிகேசன் தான். முகம் பார்த்து முகம் பேசும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறெதுவும் இருக்க முடியாது. நண்பர்கள், உறவினர்கள் அல்லது பக்கத்து வீட்டிற்கு போகலாம்.

முகம் கழுவி உடை மாற்றி கிளம்பும் பொழுது சின்ன உடல் பயிற்சியும் செய்த மாதிரி இருக்கும். மனம் விட்டு சிரித்து பேசி முகம் மலர அன்பை பரிமாறும் தருணங்கள் நம் மனதை லேசாக்கும். குடும்பத்தோடு வாரம் ஒருமுறை வெளியே செல்வது, குடும்பத்துடன் சினிமா பார்ப்பது, கடற்கரைக்கு செல்வது பிறந்த நாள் நிகழ்வுகளை வெளியில் நடத்துவது போன்றவற்றை சோஷியல் ஃபிட்னஸ் என்று சொல்லுவோம் இவையும் மனதுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உங்கள் உணர்வுகள் உங்களை ரிலாக்ஸ் பண்ண உதவும். உதாரணத்திற்கு சிலருக்கு இசை கேட்பதால் மன அமைதி கிடைக்கும்.

காபி கொட்டை, நறுமண மெழுகுவர்த்தி, வாசனை திரவியம், நறுமண பூக்கள் இவைகளை முகரும் பொழுது ஒருவித புத்துணர்ச்சி உண்டாகும். ஒவ்வொரு மனிதரின் நரம்பு மண்டலம் எந்த உணர்ச்சிக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுகிறதோ அதற்கு ஏற்ப உணர்வுகள் வேறுபடும். மன பதற்றத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உங்க உணர்வுகளின் விருப்பத்தை புரிந்து கொள்ளுங்கள். புது மொழி கற்றுக்கொள்வதினால் மூளையின் வயது குறையும். பின்னாளில் வரக்கூடிய அறிவாற்றல் சிக்கல்களை தவிர்க்க உதவும். பன்மடங்கு மொழிகளை பேசுவதால் நமது மூளை நம் மனதை சவால் விடும் பணிகளை செய்து முடிக்க பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது” என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.

- ஜெ. சதீஷ்

Related Stories: