அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்ய சென்றபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பலி: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நேற்று முன்தினம் இரவு அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்ய சென்ற மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் அருகே பருத்தி குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (49). காஞ்சிபுரம் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். மதிமுக பிரமுகராகவும் இருந்தார். இவரது மனைவி சுசிந்திரா (39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன் (39). அதே மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார். தேமுதிக பிரமுகர். இவரது மனைவி தீபா (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் வயல்வெளி பகுதியில் மின்வயர்கள் அறுந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாக்கியநாதன், தயாளன் ஆகியோர் சென்றனர்.

அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என நினைத்து, வயல்வெளி முழுவதும் அறுந்து கிடந்த மின்வயர்களை இணைக்கும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது மின்சாரம் பாய்ந்தது 2 பேரும், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.இதற்கிடையில்,  வயல்வெளிக்கு சென்றவர்கள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், அவர்களை தேடி உறவினர்கள் சென்றனர். அங்கு இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மின்வாரிய ஊழியர்கள், அங்கு சென்று, மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சடலங்களை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: