அலங்காநல்லூர்: பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாஜ மாநில தலைவர் முருகன் வேல் யாத்திரை சென்றார். மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில், பாஜ மாநில தலைவர் முருகன், வேல் யாத்திரையாக வந்து நேற்று சாமி தரிசனம் செய்தார். இதேபோல திருப்பரங்குன்றத்திலும் அவர் தரிசனம் செய்தார். பின்னர் முருகன் கூறியதாவது, ‘‘கடந்த மாதம் 6ம் தேதி வேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கினேன். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே புயல் மழை காரணமாக தொடர்ந்து வேல் யாத்திரையை பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அறுபடை வீடுகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்கிறார்’’ என்றார்.