சென்னை: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (29), சதீஷ் (25) மற்றும் விஜய் (25). இவர்கள் மூவரும் நேற்று மீன் பிடிப்பதற்காக கட்டுமரத்தில் கடலுக்கு சென்றனர். அங்கு தினேஷ், சதீஷ் ஆகியோர் வலையை வீசுவதற்காக முயன்றுள்ளனர். அப்போது, கடலில் ராட்சத அலை உருவானதால், கட்டுமரம் கவிழ்ந்தது. இதில் தினேஷ், சதீஷ் ஆகிய இருவரும் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். மீனவர் விஜய் மட்டும் நீச்சல் அடித்து தப்பித்து, அவ்வழியாக வந்த படகில் ஏறி கரைக்கு திரும்பினார். பின்னர், இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீசில் தெரிவித்தனர். போலீசார் மாயமான 2 பேரை தேடி வருகின்றனர்.