சுதந்திர போராட்ட வீரர்களின் உதவியாளர்கள் அரசு பஸ்களில் இனிமேல் இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் அவர்தம் வாரிசுகளின் உதவியாளர் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி (ம) தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் (1836 நபர்கள்) ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் வயது முதிர்வு காரணமாக, தனியாக பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும், பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 24.03.2020 அன்று போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கையில், ‘60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் உடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும்’ என அறிவித்தார். அதனடிப்படையில், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை அணுகி, மேற்குறிப்பிட்ட 60 வயதிற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் அவர்தம் உதவியாளரின் விவரங்களை சமர்ப்பித்து அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் செய்திட பயண அட்டையினை பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: