கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல்-பழநி சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புரெவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கொடைக்கானல்-வத்தலகுண்டு-பழநி சாலைகளில் வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடை விலக்கி கொள்ளப்பட்டு நேற்று போக்குவரத்து துவங்கியது. நேற்றிரவு பரவலாக பல இடங்களில் கனமழை பெய்ததால் கொடைக்கானல்-பழநி பிரதான சாலையில் சவரிக்காடு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் கொடைக்கானல்-பழநி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண்சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். மழை நேரங்களில் இதுபோன்ற மண்சரிவு இப்பகுதியில் வழக்கமாகி வருகிறது. எனவே சாலையை அகலப்படுத்தி மண்சரிவு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.