தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று கழிமுகத்துவாரம் பகுதியில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. இனால் படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் சின்னம் காரணமாக கடல் பகுதிகள் நேற்று வழக்கத்திற்கு மாறாக சீற்றம் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டது. தூத்துக்குடி ரோச் பூங்கா தென்புறம் உள்ள உப்பாறு கழிமுகத்துவார பகுதி, தெற்கு பீச்ரோட்டில் உள்ள வியூ பாய்ண்ட் கடல் பகுதி ஆகிய இடங்களில் தண்ணீர் வற்றி கடல் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.
வழக்கமாக புயல் காலங்களில் கடலில் சீற்றம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாறாக இந்த பகுதிகளில் தண்ணீர் வற்றி காணப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணரீல் மூழ்கியிருந்த கடல் தாவரங்கள், சிப்பிகள், சிறிய மண் திட்டுகள் வெளியே தெரிந்தன. மாலையில் வழக்கம்போல அப்பகுதிகளில் கடல் நீர் நிரம்பி காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் கூறுகையில்: இது வழக்கமாக நிகழ்கின்ற நிகழ்வுதான். காலையில் தண்ணீர் வற்றுவதும் மாலையில் அல்லது இரவில் மீண்டும் பழைய நிலையை அடைவதும் வாடிக்கையாக நடக்கும் என்றனர்.