விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன செய்வது?: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!!!

புதுடெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3  வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் முன்னெடுத்தனர். டெல்லி நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர், லாரிகளுடன் டெல்லி  எல்லையில் உள்ள புறநகர் பகுதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு மாநில விவசாயிகளும் கைகோர்த்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை கைவிடுமாறு, மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையே, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த 1ம் தேதியும், நேற்று முன்தினமும் நடத்திய 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தொடர்ந்து இன்று பிற்பகல் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இந்நிலையில், விவசாய பிரதிநிதிகளுடன் பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் நிராகரித்த சூழ்நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலும், விவசாயிகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: