ராமதாஸ் குற்றச்சாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதியை சிதைக்க துடிக்கிறது

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. வேதியியல் ஆசிரியர்கள்  நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட  வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து ஆணையிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர் நீதிமன்ற  தீர்ப்புகளை மதிக்காமல், சமூகநீதிக்கு எதிரானவர்களின் வழிகாட்டுதலால் உச்ச நீதிமன்றம் வரை சென்று சமூகநீதியை சிதைக்க துடிக்கிறது.

அதன் உச்சக்கட்டமாக வாரியத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பொதுப்போட்டிக்குள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நுழையக் கூடாது; அது உயர் வகுப்பினருக்கு மட்டுமே உரியது என்று வாதிட்டிருக்கிறார். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள  சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகளையும், அதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் சமூக நீதிக்கு எதிரான வழக்கறிஞர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து விட்டு, அந்த இடங்களில் சமூகநீதிக்கு ஆதரவானவர்களை நியமிக்க  வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன் இதை செய்து, சமூகநீதியை நிலைநிறுத்துவார் என்று நம்புகிறேன்.

Related Stories: