மதுரை: சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நரிக்குறவர் சமூகத்து பெண்ணிடம் காவலர் ராமச்சந்திரன். மது போதையில் பட்டப்பகலில் தவறாக நடக்க முயற்சித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்த செய்திகளும் வெளியாகின. இதையே அடிப்படையாகக் கொண்டு, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். நீதிபதிகள், ‘‘பொறுப்பான பணியை மேற்ெகாள்ளும் காவல்துறையினர் பொது இடத்தில், பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
புகார் வரும் வரை காத்திருக்காமல் சமூக வலைத்தளங்களிலும், செய்தியாகவும் வெளிவரும் போது அதையே அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களிலும், செய்தியாகவும் பல தகவல்கள் வெளிவருகின்றன. இதை கண்காணிப்பதற்காக தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த புகாரில் சம்பந்தப்பட்ட காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எஸ்பியும், தமிழக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.