தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள் : கர்நாடக பாஜக அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்

குடகு, :தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று கர்நாடக பாஜக அமைச்சர் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளதால், அவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டையில் விவசாயிகளிடம் கர்நாடகா பாஜக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாதவர்கள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள். மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடியாத கோழை மட்டுமே தற்கொலை செய்து கொள்வார். தண்ணீருக்குள் விழுந்தவுடன், நீந்தி வெல்ல வேண்டும். எனவே, எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது’ என்று ேபசினர்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் ஒரு விவசாய பெண்ணிடம், உங்கள் கைகளில் எப்படி இத்தனை தங்க வளையல்கள் உள்ளன? என்று கேட்டேன். அதற்கு அந்த பெண், ‘இந்த பூமியில் (விவசாய நிலம்) 35 ஆண்டாக உழைத்த கடின உழைப்பின் மூலம் கிடைத்தது’ என்றார். இவ்வாறாக, அந்த பெண்ணை போல் விவசாயிகள் நிலத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டும். தற்கொலை  செய்து கொள்ள நினைப்போருக்கு, அந்த பெண்ணின் வாழ்க்கையே நல்ல உதாரணம்’ என்றார்.

இவரது பேச்சு கர்நாடக மற்றும் தேசிய ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சர் பாட்டீல் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் கோழைத்தனமானவர்கள். விவசாயிகள் இதை ஒருபோதும் செய்யக்கூடாது. மாநிலத்தின் விவசாய அமைச்சராகிய நான், விவசாயிகளைப் பற்றி பேசினேன். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று சொன்னேன். எனவே, நான் மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த கேள்வியும் எழவில்லை. விவசாயிகள் நல்ல வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அதுதான் எங்களது நோக்கம்; அதற்காக தான் நாங்கள் வேலையைச் செய்கிறோம்’ என்றார்.

Related Stories: