நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு.. ஆளும் டிஆர்எஸ் கட்சி முன்னிலை!!

ஐதராபாத், :இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஐதராபாத் மேயர் தேர்தலில் டிஆர்எஸ் முன்னிலை வகித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 1,122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 2016ம் நடந்த தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 99 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 44 இடங்களையம், பாஜக 4 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 1 இடங்களையும் வென்றன. இருப்பினும், இந்த முறை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவியது.

அதற்காக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். அதேசமயம் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஐதராபாத் மக்களவை தொகுதியை தன்வசம் வைத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியும் வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 30 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இன்றைய வாக்கு எண்ணும் பணியில் 8,152 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 150 இடங்களில் பெரும்பான்மை பலத்துக்கான 75 இடங்களுக்கு மேலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து சென்றது. காலை 9 மணி நிலவரப்படி 31 வார்டுகளில் பாஜக முன்னிலையும், டிஆர்எஸ் 16 மற்றும் ஏஐஐஎம் 6 இடங்களில் முன்னணியில் இருந்தன. தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி 69 வார்டுகளில் டிஆர்எஸ், 39 இடங்களில் பாஜக மற்றும் ஏஐஐஎம் 32, காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.  

Related Stories: