கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து ஊட்டி வழியாக செல்லும் மைசூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் அருகே தவளைமலை பகுதியில் பாறைகளை உடைத்து சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளன.
மலைப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையின் பல பகுதிகளிலும் விரிவாக்கப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் தவளை மலை பகுதியில் நான்காவது கொண்டை ஊசி வளைவு ஒட்டியுள்ள சாலை பகுதி மிகவும் குறுகலான பகுதியாக உள்ளது.இதனால் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் காலங்களில் இப்பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன.
சாலையின் மேற்புறம் மிகப்பெரிய பாறை இருப்பதால் சாலையை அகலப்படுத்துவதில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இப்பகுதியில் பாறைகளை உடைத்து அகற்றி 200 மீட்டர் தூரத்திற்கு சுமார் 4 மீட்டர் அகலத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளன. இதற்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலும், அதிர்வுகள் ஏற்படாத வகையிலும் பாறைகளில் துளையிட்டு உடைத்து அகற்றும் பணிகள் இயந்திரங்கள் மூலமும் மனிதர்கள் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்காக தேவைப்படும் நேரங்களில் வாகன போக்குவரத்தை நிறுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.பணிகள் நிறைவடைந்து இப்பகுதியில் சாலையை அகலப்படுத்தபட்டால் போக்குவரத்திற்கு பாதுகாப்பாகவும் வாகனங்கள் விரைவாக செல்லவும் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.