திமுக தலைவர் ஸ்டாலினை கண்டு அதிமுகவுக்கு அச்சம் : மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட்

மதுரை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டு அதிமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முன்னதாக முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் ரூ.1,295.76 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை துவக்கி வைத்தார். மேலும் ரூ.30.19 கோடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடம், ரூ.15 கோடியில் மதுரை பாலரெங்காபுரத்தில் கடடப்பட்ட மண்டல புற்றுநோய் மைய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்புவிழா மற்றும் ஒன்றிய அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரை மக்களுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அரசு நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் பங்கெடுத்தேன்.அரசு விழாக்கள் ஆளும்கட்சியின்  விழாக்களாக மாறும் துயரம் என்று நீங்கும் என தெரியவில்லை? ஜெயலலிதா அவர்களின் பெயரை உச்சரிப்பதை விட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரையே அதிகம் உச்சரித்தார்கள். தேர்தல் அச்சம் அலையடிக்கத் துவங்கிவிட்டது ஆளுங்கட்சிக்கு..சிறப்பு, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: