சென்னை:ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், தொடர்ந்து மன்னர் வளைகுடாவில் மையம் கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான புரேவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. ராமநாதபுரம் அருகே இருக்கும் இந்த புரேவி தூத்துக்குடியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. பாம்பனில் இருந்து 70 கி.மீ., கன்னியாகுமரியில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக புரேவி ஒரே இடத்தில் இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. இப்படி நகராமல் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறுகிறார்.
மன்னர் வளைகுடாவில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் பொதுவாக அதிக மழையே கொடுக்கும். இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்று அருமையான நாள் என்றே கூறலாம். இன்று காலை நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருமழையில் மிக சிறப்பான சம்பவம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். தற்போது வரை கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் மழை இல்லை. நேர ஆக ஆக அங்கும் மழை பெய்ய வாய்ப்பு அதிகம், எனத் தெரிவித்துள்ளார்.