×

தண்ணீர் குடிக்க சென்றபோது முதலை கடித்து சிறுவன் பலி: ரெய்ச்சூர் அருகே சோகம்

ரெய்ச்சூர்: கிருஷ்ணா நதியில் தண்ணீர் குடிக்க இறங்கிய சிறுவன் முதலைக்கு பலியான சோக சம்பவம் ரெய்ச்சூரு அருகே நடைபெற்றது.ரெய்ச்சூரு தாலுகாவில் உள்ளது டொங்காராம்புரா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகார்ஜூனா(12). மாநிலத்தில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மல்லிகார்ஜூனா கடந்த சில நாட்களாக கூலி வேலைக்கு சென்றுள்ளான். குழந்தை தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்
கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்றுள்ளார்.

இந்த நிலையில், மதியம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதற்காக கிருஷ்ணா நதியில் இறங்கியுள்ளான். அப்போது, அவனை முதலை இழுத்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கிராமத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் உள்ளூர் மீனவர்களின் படகுகளை கொண்டு தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை சிறுவனின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அவனை இழுத்து சென்ற முதலை உடல்பாகத்தை முழுவதும் தின்றுள்ளது. மனதை உருகவைக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags : When going to drink water Crocodile bite kills boy: Tragedy near Raichur
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...