‘எங்கிட்ட 20 ரூபாதான் இருக்கு...’ வைரலாகும் மாஜி எம்எல்ஏ ஆட்டோ பயணம்

மதுரை: ‘எங்கிட்டே இருபது ரூபாதான் இருக்கு’ எனக் கூறி ஆட்டோவில் பயணித்த, மதுரை மாஜி எம்எல்ஏ குறித்து, ஆட்டோ டிரைவர் ஒருவர் வியந்து எழுதிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் பாண்டி. ஆட்டோ டிரைவரான இவரது முகநூல் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ‘‘மதுரை அரசு மருத்துவமனை அருகே பஸ்சில் ஏற முயன்ற ஒரு பெரியவர், தனது ஒற்றைக்கால் செருப்பைத் தவற விட்டார். உடனே கீழே இறங்கி, ஒற்றைக்கையில் ஒரு செருப்புடன் மற்றொன்றை தேடி கண்டுபிடித்தார். மகிழ்ச்சியில் இரு செருப்புகளையும்  காலில் போட்டுக்கொண்டு நின்றவரை, அருகில் சென்று பார்த்து, ‘எங்கே போகணும்’ என்றதும், ‘தம்பி... கருப்பாயூரணி போகணும். ஆனால் என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு’ என்றார். ‘வாங்க ஐயா’ எனச் சொல்லி அவரை ஏற்றியதும் அடையாளம் தெரிந்தது.

அவர்தான் இருமுறை மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நன்மாறன் ஐயா, அவருடன் ஒரு செல்பி எடுத்து பதிவிட்டுள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.முன்னாள் எம்எல்ஏ நன்மாறன், பென்சன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதியில் வாழ்க்கை நடத்துகிறார். மதுரை ஆரப்பாளையத்தில் மனைவியுடன் எளிமையாக வாழும் இவருக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

Related Stories: