பந்தலூர்: நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோத்தகிரி, ஊட்டி, மசினகுடி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களில் 600க்கும் மேற்பட்ட பயனாளிகளை தேர்ந்தெடுத்து இலவச மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மாடுகளுக்கு பதிலாக கலப்பின மாடுகளை வழங்கியதாக தெரிகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியற்ற அம்மாடுகளை கோமாரி நோய் தாக்கியதாகவும், வயதான மாடுகள், கறவைக்கு தகுதி இல்லாத மாடுகளாகவும், சினை பிடிக்காத மாடுகளாகவும் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பந்தலூர் அருகே கூவமூலை பழங்குடியினர் கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு வழங்கிய மாடுகளில் இதுவரை 15 மாடுகள் இறந்துள்ளதால் பழங்குடியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில் மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதால், கிடைத்த விலைக்கு மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.