மதுரை: கரூரைச் சேர்ந்த இளஞ்செழியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 900 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் குடமுழுக்கு விழா டிச. 4ல் (இன்று) நடக்கிறது. சைவ ஆகம விதிப்படி, தேவாரம் மற்றும் திருவாசகம் வாசித்து தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘குடமுழுக்கு விழாவில் 25 ஓதுவார்கள் பங்கேற்று தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுகின்றனர். 6 கால பூஜையும் தமிழில் நடக்கும். கும்பத்திற்கு புனித நீர் கொண்டு செல்லும்போதும், தீபாராதனை காட்டும் போதும் தமிழில் பாடப்படும்’’ என்றார்.