மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் நிச்சயம் நிறைவேறும்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு, மக்களால் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளும் தேவைகளும் நிச்சயம் நிறைவேறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதையே, அல்லல் நிறைந்த பெரும் சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை, ‘மாற்றுத் திறனாளிகள்’ என அழைக்கச் செய்து, அவர்களின் நலனுக்கென தனித்துறையை உருவாக்கி, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து அக்கறையுடன் கவனித்தவர் கலைஞர்.

தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட கண்ணொளி திட்டம் முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் வரை, ஒவ்வொன்றையும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தி இதய நிறைவு கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, அவர்களுக்கு துணையாகப் பேருந்தில் பயணிப்போருக்கும் கட்டணச் சலுகை, மேற்படிப்பு பயில்வோருக்கு முழுக் கட்டணச் சலுகை என கலைஞர் ஆட்சிக்காலத்தில் உரிமைகள் - சலுகைகள் பலவும் தொடர்ந்து வழங்கப்பட்டன.

டிசம்பர் 3ம் நாளினை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐ.நா. அவை அறிவித்துள்ள நிலையில், அந்த நாளில் நடைபெறும் தங்களுக்கான உரிமை போற்றும் நிகழ்வுகளில், தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விருப்ப விடுப்பு எடுக்கும் நல்வாய்ப்பையும் வழங்கியது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் இத்தகைய வாய்ப்பை எண்ணிப் பார்க்காத நிலையில் கலைஞர் இதனை வழங்கினார். அடுக்கடுக்கான பல திட்டங்களையும் வகுத்தளித்தார். அந்த நன்றிப் பெருக்குடன், கலைஞரின் ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வணக்கத்தைச் செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. தி.மு.க என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மதித்து, தேவைகளை நிறைவேற்றி நலன் பேணும் அற இயக்கம். விரைவில் தமிழ்மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேறும் என்ற உறுதியினை இந்த மாற்றுத் திறனாளிகள் நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கலைஞரின் ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வணக்கத்தைச் செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

Related Stories: