அதிமுக ஊழல் கட்சியா? திமுக ஊழல் கட்சியா? என்பது குறித்து கோட்டையிலேயே நேருக்கு நேர் விவாதிக்க தயார்: முதல்வர் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி.ஆ.ராசா பதிலடி

சென்னை: சென்னையில் திமுக எம்.பி.ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான பதிலடி கொடுத்தார். திமுக தலைவர்கள் யாரும் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்படவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் வகிக்கும் பொறுப்பை மறந்து மூன்றாம் தர மனிதரை போல் பேசி இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்.

தல்வர் எடப்பாடி மீதே நெடுஞ்சாலைத்துறை ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. திமுக தொடர்ந்த வழக்குகளுக்கு பெற்றிருந்த தடை ஆணையை நீக்கி வழக்கை சந்திக்க எடப்பாடி தயாரா? 2 ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் கூண்டு ஏறி நின்று வாதாடினேன். 2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று முதல்வருக்கு நேரடி சவால் விட்டார். அதிமுக ஊழல் கட்சியா? அல்லது திமுக ஊழல் கட்சியா? என்பது குறித்து கோட்டையிலேயே நேருக்கு நேர் விவாதிக்க தயார்.

கொள்ளை அடிப்பதற்காக சசிகலா உள்ளிட்டோரை தங்க வைத்திருந்தார் ஜெயலலிதா என்று உச்சநீதிமன்றமே கூறி உள்ளது. அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் எடப்பாடி. நாடு முழுவதும் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடே எதிர்க்கும் வேளாண் சட்டத்தில் தவறு இல்லை என்கிறார் முதல்வர் பழனிச்சாமி. 3 வேளாண் சட்டத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை என்ற வார்த்தை எங்காவது உள்ளதா? என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை மூட வழிவகுக்கும்  வேளாண் சட்டங்களை விவசாய விரோத சட்டம் என்று தான் கூற வேண்டும். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் விசுவாசத்தை காட்டவே வேளாண் சட்டத்துக்கு முதல்வர் ஆதரவு தெரிவிக்கிறார்.

Related Stories: