சேலம்: சேலம் கொரோனா ஒழிப்பில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் சேலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது; சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகின்றன. சேலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7.5% இடஒதுக்கீட்டில் சேலத்தில் 26 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். சேலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. சிறப்பான நிர்வாகம் இருப்பதால் தான் தமிழகம் தேசிய அளவில் விருது வாங்கி வருகிறது.