பெங்களூரு: பெங்களூருவில் வெளிப்படையாக போதை பொருளை கடத்த முடியவில்லை என்றதும், சாமி போட்டோக்கள் மற்றும் பிற பொருட்கள் வாயிலாக மறைத்து வைத்து போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. அதன்படி சமீபத்தில் சாம்ராஜ்பேட்டை கூரியர் மையத்திற்கு வந்த சாமி போட்டோக்களை ஆய்வு செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் மறைத்து வைத்து கடத்தியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருந்தனர். விசாரணையில் அவர்கள் “டார்க் வெப்” வாயிலாக வெளி நாடுகளில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் மேலும் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்களை சி.சி.பி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.