×

மழைக்கால சரும பராமரிப்பு

தொடங்கிவிட்டது வடகிழக்குப் பருவமழை. தமிழகத்துக்குப் போதுமான தண்ணீரை வழங்கும் மழையாக புகழப்படும் மழை இந்த ஆண்டில் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். வரும் டிசம்பர் வரையிலும் இம்மழைக்காலம் நீடிக்கும் என்பதும் தெரிந்ததுதான். இந்த பருவகாலத்தில் மழையை கொண்டாடத் தயாராகிவிட்ட நாம் கொஞ்சம் சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்...

மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் கூடி, துணிகள் ஒன்றும் காயாது. பாதையெங்கும் தண்ணீர் தேங்குவதால் அங்கங்கே கால்களில் ஈரம் படவும் அதிக வாய்ப்புள்ளது. மழைக்காலம் என்றாலே பூஞ்சையால் ஏற்படும் படர்தாமரை நோய் அதிகம் உண்டாகும்.

ஏற்கனவே, இந்தியா முழுக்க படர்தாமரை பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ஈர உடையை அணிபவர்களுக்கு எளிதாக படர்தாமரை பரவக்கூடும் அல்லது ஏற்கனவே படர்தாமரை பாதிக்கப்பட்டவர்கள் ஈர உடையை அணியும்போது படர்தாமரை பாதிப்பு குணமாக அதிக நாட்கள் பிடிக்கும்.

ஈரப்பதமான இடங்களில் பூஞ்சைகள் நன்கு வளர ஆரம்பிக்கும் என்பதால், பூஞ்சைத் தொற்று வராமல் இருக்க எப்போதுமே நம் உடலை ஈரம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளாடைகளை முடிந்தளவு எலாஸ்டிக் (Elastic) அதிகம் இல்லாததாக தேர்ந்தெடுக்க வேண்டும். எலாஸ்டிக் ஈரப்பதத்தை உறியாது.

வெளிர்நிறத்தில் தூய பருத்தியினால் செய்யப்பட்ட உள்ளாடைகளையும், அப்படியே எலாஸ்டிக் உள்ள உள்ளாடையாக இருந்தால், அந்த எலாஸ்டிக் இருக்கும் பகுதி துணியால் மூடியிருக்கும் உள்ளாடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகிக்கலாம். இவ்வாறு செய்யும்போது வியர்வை நன்கு உறிஞ்சப்படும். அது மட்டுமில்லாமல், வெளிர் நிறம் உள்ளாடைகளில் கொஞ்சம் அழுக்கு இருந்தாலும் வெளியில் பளிச்சென தெரியும். அப்போதுதான் நாம் அதை நன்கு சுத்தப்படுத்துவோம்.

படர் தாமரையால் பாதிக்கப்பட்டிருக்கிற பலரை கவனித்துப் பார்த்தால் அவர்கள் அணிகிற ஆடைகளே முதல் காரணமாக இருப்பதை அறிய முடியும். இப்போது பல பெண்கள் ‘டைட்ஸ்’ அணிகிறார்கள். அவர்களில் சிலர் உள்ளாடைகளே அணியாமல் வெறும் ‘டைட்ஸ்’ அணிகின்றனர். அது மிகவும் தவறு. ‘டைட்ஸ்’ பொதுவாக நைலான் துணிகளால் செய்யப்படுவதால், அவை நன்கு விரிவடைகின்றன. காட்டன் அளவுக்கு நைலான் துணி ஈரத்தை உறியாது. மழைக்காலம் மற்றும் குளிர்காலம்தான் டைட்ஸ் அணிய உகந்தது என்றாலும், உள்ளே ஈரம் இல்லாத பருத்தி உள்ளாடை அணிந்து மேலே டைட்ஸ் அணிய வேண்டும்.

ஆண்களின் ஃபேவரைட் ட்ரஸ் ‘ஜீன்ஸ்’. காரணம் ஜீன்ஸை துவைக்காமல் அப்படியே மாதக்கணக்கில் அணிந்து கொள்ளலாம் என்பதே. துவைக்காத ஜீன்ஸில் கிருமிகள் நிறைய இருக்கும். ஆகையால் படர் தாமரையால் பாதிக்கப்பட்டவர்கள் அது முற்றிலும் குணமாகும் வரை ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். அதிலும், ஈரம் இல்லாத ஜீன்ஸ் அணிவது முக்கியம்.

குடும்பத்தில் ஒருவருக்கு படர்தாமரை இருந்தால் கூட, அவர்களது துணியை தனியாக துவைக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகள் தங்களுக்கு இருக்கும் படர் தாமரை பிரச்னையை பெற்றோரிடம் சொல்லத் தயங்கி, அது உடம்பு முழுக்க பரவியபின் சொல்கிறார்கள். இதற்கு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அவர்களது உடம்பில் எங்காவது படைபோல் இருக்கிறதா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் நேரங்களில், மென்மையான காட்டனால் மூடியிருக்கக்கூடிய நாப்கின்களைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். அதிக ரத்தப்போக்கை உறிஞ்சக்கூடியது என்று விற்பனை செய்யப்படும் பல வகை நாப்கின்கள், வெளிப்புறத்தில் மிகவும் சொரசொரப்பாக உள்ளது. அது தொடை இடுக்குகளில் உரசி, தோலில் அரிப்பு ஏற்படுத்தும். அங்கு சொரியும்போது கிருமி தொற்று எளிதாக உண்டாகும். மேலும் புண்ணாகிவிடும். ஈரப்பதம் இல்லாமல் இருக்க  4, 5 முறை நாப்கின்களை மாற்ற வேண்டும்.

இப்படி கவனமாகப் பார்த்துக் கொண்டால் படர்தாமரை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.சரும உராய்வு படர்தாமரைக்கு அடுத்து, Intertrigo என்று சொல்லப்படும் பிரச்னையும் மழைக்காலங்களில் வரக்கூடியது. Intertrigo என்றால் என்ன? எங்கெல்லாம் தோல் உராய்வு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் தோல் அழற்சி உண்டாகும். பொதுவாக அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் தோல் உராய்வு உண்டாகும் பகுதிகள். தவிர, பெண்களுக்கு மார்புக்கு அடியிலும், உடல் பருமனாக உள்ளவர்களுக்கு வயிறு மடிப்புகளிலும், கால் விரல்களுக்கு இடையிலும் Intertrigo ஏற்படலாம்.

இந்நிலை பொதுவாக Andida Albicans என்ற பூஞ்சையினால் வரக்கூடியது என்றாலும், சில நேரங்களில் பாக்டீரியாக்களும் இதற்கு காரணமாகின்றன. மறைவான தோல் பகுதியில் காற்றோட்டம் இல்லாததாலும், எப்போதுமே உராய்வில் இருப்பதோடு, கூடவே ஈரப்பதத்தினாலும், இயற்கையாகவே நம் தோலில் இருக்கும் கிருமிகள் இன்னும் அதிகமாகி, இந்த தொந்தரவை ஏற்படுத்துகின்றன. படர் தாமரைக்கான பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதால் அதைத் தவிர்க்கலாம்.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையில் வரும் Intertrigo- வை எப்படித் தடுப்பது என்பதையும் பார்த்துவிடுவோம்...

ஈரம் இல்லாத காட்டன் சாக்ஸை உபயோகிக்க வேண்டும். துவைக்காமல் அடுத்த நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கால்களில் உள்ள விரல் இடுக்கில் Intertrigo வந்து விட்டால், விரல் இடுக்கில் ஈரம் இல்லாமல், காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் கால்களை நன்கு அலம்பி, ஈரத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, சின்னச் சின்ன ஹேர் பேண்ட்களை (ரப்பர் பேண்ட்கள் கிடையாது) விரல்களின் நுனியில் மாட்டி வைத்தால், விரல்கள் ஒன்றுக்கொன்று சிறிது விலகி காற்றோட்டம் கிடைக்கும். ஷூவிற்குப் பதிலாக செருப்புகளையே உபயோகப்படுத்த வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்படி Clotrimazole Cream தடவலாம். சில நேரங்களில் Fluconazole மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தவிர, மழைக்காலங்களில் தண்ணீரில் அதிக நேரம் கால் வைப்பதால் பாதங்களில் மற்றும் உள்ளங்காலில் பாக்டீரியாக்களின் தொற்றினால் வரக்கூடிய Deratolysis Punctata  என்ற சருமப் பிரச்னையும் ஏற்படும். இது பொதுவாக உள்ளங்கை, உள்ளங்காலை பாதித்தாலும், அதிகமாக வந்தால் கால் மற்றும் கையின் மேற்புறத்திலும் வரலாம்.

சமையற்காரர், மாவு அரைப்பவர், டீ மாஸ்டர், வீட்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், கறி/மீன் கடையில் வேலை பார்ப்பவர்கள், பால் கறப்பவர்கள் என வேலை நிமித்தமாக அதிக நேரம் தண்ணீரை கையாள்பவர்கள்தான். இதனால் இத்தகைய தொழிலில் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

மழைக்காலங்களில், தண்ணீர் அதிகம் தேங்கியிருக்கும் இடங்களை தினமும் கடந்துபோக வேண்டியவர்கள் எல்லோரையுமே Deratolysis Punctata தோல் பிரச்னை பாதிக்கலாம். இதை Dermatophilus Congolinsis, Cryptococcus sedentarius,Coryene bacteria, Actinonyces மற்றும் Streptomycas எனப்படும் பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. இவ்வகை தொற்று பாதிப்பால், கை மற்றும் காலில் துர்நாற்றம் உண்டாகலாம். இவ்வகை பாக்டீரியாக்கள் Thiols, Sulfides மற்றும் Thoesters போன்ற வெல்ஃபர் காம்பவுண்ட்களை வெளியிடுவதால் இந்த துர்நாற்றம் உண்டாகிறது.

காலில் இந்தத் தொற்று இருப்பதை கவனிக்காமல், அதோடு சாக்ஸையும் துவைக்காமல் உபயோகிக்கும்போது மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசத் தொடங்கும். இத்தகைய பிரச்னையை சமாளிக்க முடிந்தளவு ஷூ அணிவதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாத பட்சத்தில், காட்டன் சாக்ஸ் அணியலாம். ஒரே ஷூவை தொடர்ந்து அணியாமல், ஒரு நாள் விட்டு ஒருநாள் ஷூ வை அணியலாம். மற்றவர்கள், விரல்கள் காற்றோட்டமாக இருக்கும் வகையில் செருப்புகளை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

மழைக்காலத்தில் தேங்கியிருக்கும் அசுத்தமான நீரில், கால் படும் என்பதால், தோல் பிரச்னை இல்லாதவர்களும், வெளியே சென்று வந்தபின், கால்களை சோப்பு போட்டு கழுவி, ஈரம் போக துண்டினால் துடைக்க வேண்டும். மற்றவர்களுடன் உங்களது துண்டு, செருப்பு மற்றும் ஷூ ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விசேஷமாக நவம்பர் மாதம் ‘ஆரோக்கியமான தோல் பராமரிப்பு மாதம் என்பதால், ‘தோல் பராமரிப்பு’ பற்றி முழுமையாக புரிந்துகொள்வோம். உடலின் பெரிய உறுப்பானதும், பராமரிப்பில் முழு கவனமும் செலுத்த வேண்டிய தோலில் கையில் கிடைக்கும் க்ரீம்களையெல்லாம் தடவி வீணாக்காமல் பட்டுப்போல் காத்திடுவோம்.

ஒவ்வொரு பருவ காலத்துக்கும் தகுந்தவாறு சருமத்தை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்துகொள்வதோடு, தோல், நகம் மற்றும் முடி போன்றவற்றில் பொதுவாக பாதிக்கக்கூடிய பிரச்னைகளையும் புரிந்துகொண்டு அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் முழுமையாக அறிந்தால் 24 மணி நேரத்தில் சொரியாஸிஸை குணப்படுத்துவோம்/ ஒரே நாளில் வெண்புள்ளியை மாற்றுவோம்’’ போன்ற விளம்பரங்களால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்.

( ரசிக்கலாம்... பராமரிக்கலாம்... )

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!