கறம்பக்குடி: பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை தாலுகா கோமாபுறத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (52), விவசாயி. இவர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் சில நாட்கலுக்கு முன், உட்பிரிவு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கு விஏஓ ஜெரோன், ரூ.30 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை விஏஓவிடம் முதல் தவணை என்று ராஜீவ்காந்தி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விஏஓ ஜெரோனை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில், தாலுகா துணை தாசில்தார் செல்வகணபதி, நிலஅளவையர் முத்து ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து விஏஓ ஜெரோன், துணை தாசில்தார் செல்வகணபதி, நிலஅளவையர் முத்து ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.