ஓசூர்: காஞ்சி புரத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு மும்பை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று, கடந்த அக்டோபர் 20ம் தேதி புறப்பட்டு சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 21ம் தேதி காலை மற்றொரு லாரியில் வந்த 20க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், டிவைர்களை தாக்கி விட்டு செல்போனுடன் லாரியை கடத்திச் சென்றது. விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்று, ஒரு மாதமாக கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பரத்தேவாணி (37) என்பவரை டெல்லியில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தனர். கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.