சீன ஆளில்லா விண்கலம் நிலவில் தரையிறங்கிபாறை துகள் சேகரிப்பு

பிஜீங்: சீனா செலுத்திய ஆளில்லா விண்கலமான சாங்க் இ- 5 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பாறைத் துகள்களை சேகரித்துள்ளது. நிலவில் விண்கலத்தை அனுப்பி அங்குள்ள பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை  பூமிக்கு எடுத்து வந்து அய்வு செய்வதற்காக சீனா திட்டமிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி சாங்க் இ -5 எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் நேற்று முன்தினம்  நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில் இந்த விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் உள்ள பாறை கற்களை சேகரிக்க தொடங்கியது.

சீன நேரப்படி நேற்று அதிகாலை நிலவின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழத்திற்கு துளையிட்டு, விண்கலம் பாறைத் துகள்களை சேகரித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சேகரித்த மாதிரிகளுடன் விண்கலம் மீண்டும்  பூமியை வந்தடையும். இதுவரை அறியப்படாத பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள பாறை துகள்களை இந்த விண்கலம் சேரித்து எடுத்து வரும். சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால், நிலவில் இருந்து மாதிரிகளை  எடுத்து வந்த மூன்றாவது நாடு என்ற பெயரை சீனா பெறும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை நிலவின் மாதிரிகளை சேகரித்து எடுத்துவந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: