×

எடப்பாடி அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ்: உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

சென்னை : எடப்பாடி அரசுக்கான பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. சட்டப்பேரவைக்குள் 2017ம் ஆண்டு குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.  இதையடுத்து மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் பேரவைக்கு குட்கா கொண்டு சென்றனர். பாராளுமன்றம் எது உரிமை, உரிமை மீறல் என்பதை வரையறை செய்யவில்லை. முதல்வரை மாற்றக் கோரி 18 எம்எல்ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்படி தொடர்ச்சியாக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால் தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது என வாதிட்டனர்.

சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ. எல் சோமையாஜி, உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை,அவர்கள்  முன் அனுமதி பெறாமல் குட்கா பொருட்களை கொண்டு வந்துள்ளனர். இந்த அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்கு குறைவு ஏற்பட்டதில்லை. எனவே அவையில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்னை கையில் எடுக்கப்பட்டது என கூறுவதில் அர்த்தமில்லை. அவையின் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எது வேண்டுமானாலும் உரிமை மீறல் என கருதலாம், சட்டப்பேரவை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளர்  சார்பில் ஆஜராகி வரும் சோமையாஜியின் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2.15 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.



Tags : Rights Committee ,entourage ,government ,MK Stalin ,Edappadi ,High Court ,DMK , Because the majority of the Edappadi government is in danger To those including MK Stalin Claim Notice: DMK's argument in the High Court
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...