×

கழிவுநீரோடையில் அடைப்பு: எம்கேபி நகர் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கும் அபாயம்

நெல்லை: பாளை மனகாவலம்பிள்ளை நகர் ஓடையில் காணப்படும் அடைப்புகள் காரணமாக மழை பெய்தால் அங்குள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கும் அபாயத்தில் உள்ளன. பாளை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பல்வேறு இடங்களில் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மூளிக்குளம் வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக அடைப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தண்ணீர் ராஜா குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு செல்கிறது. பொதுமக்கள் தெருக்களில் தண்ணீருக்கு மத்தியில் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. இதேபோல் பாளை மனகாவலம்பிள்ளை ஓடையிலும் அதிகளவில் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது.

எனவே அங்குள்ள கழிவுநீர் திறந்தவெளியில் பாய்ந்து வருகிறது. மனகாவலம்பிள்ளை நகரில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. புரெவி புயல் வரும் நிலையில் அப்பகுதியில் தண்ணீர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. எனவே மழைநீர் ஓடையில் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் நிலை ஏற்படும். அப்பகுதியில் சுமார் 500 வீடுகள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளன. மழைநீர் வந்தால் அத்தகைய வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலையே காணப்படுகிறது. எனவே மனகாவலம்பிள்ளை நகர் ஓடையை சீர்செய்து தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : apartments ,MKB Nagar , Sewage blockage: MKB Nagar apartments at risk of floating in water
× RELATED குடியிருப்பு பகுதியில் நிறுத்தியிருந்த டூவீலர்களை எரித்தவர்களுக்கு வலை