சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்க தவைர் சேம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக மண்குவளையில் டீ, காபி வழங்கப்படும் என்றும், அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளை பயன்பாட்டை கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதன்மூலம் பிளாஸ்டிக் அல்லாத சூழ்நிலையை உருவாக்குவதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியம் பேணி காக்கப்படும். இதன்மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நல்ல முடிவை எடுத்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கும், மத்திய ரயில்வே அமைச்சருக்கும் இந்தியாவில் மண்பாண்ட தொழில் செய்யும் 10 கோடி பேர் சார்பிலும், தமிழகத்தில் உள்ள 40 லட்சம் குலாலர் சமூக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் வரவேற்பார்கள். டீ, காபிக்கு மட்டுமின்றி உணவுக்கு பயன்படுத்தப்படும் அனைத்திலும் மண்பாண்டங்களை பயன்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தமிழக அரசு மத்திய அரசை பின்பற்றி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதித்து மண்ணால் ஆன குடுவையை பயன்படுத்தவும், தேனீர் கடைகளிலும் மண் குவளையில் டீ, காபி வழங்கவும் ஆணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.