சென்னை: தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் 2021 சட்ட மன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தை காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறது. இதன்படி, இன்று கிருஷ்ணகிரி மாவட்ட திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில்தான் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் தங்கநாற்கரம் சாலை திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ளது. தனியார் ஊடகம் வெளியிட்ட புள்ளிவிபத்தில் பல துறைகளில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழகம் பல துறைகளில் தோல்வி அடைந்ததையே புள்ளி விவரம் காட்டுகிறது. உள்ளிடக்கிய வளர்ச்சியில் தான் தமிழகம் முதலிடம் என புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்திலும் பின் தங்கியதை மறைத்துவிட்டு ஒன்றில் மட்டும் முதலிடம் பிடித்ததை விளம்பரம் செய்கிறார்கள்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைத்து போயுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து உண்மையான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாய கடனை ரத்து செய்யமாட்டேன் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரை சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஹெட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை ஒடுக்கிறவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஹெட்ரோகார்பன் திட்டங்கள் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு எதிராக இருக்கக் கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்றும் குற்றம்சாட்டினார்.
அணை பாதுகாப்பு உரிமையை விட்டுத்தந்த எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயியா?, ஹெட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை அனுமதித்த எடப்பாடி பழனிசாமி விவசாயியா?, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்காத எடப்பாடி பழனிசாமி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார். சூளகிரி புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றார்களே, அது என்னவாயிற்று, தற்போது, அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.