×

பரிவர்த்தனைக்கு 30% உச்சவரம்பு: டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு.!!!

டெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளுக்கு 30 சதவிகிதம் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறு நிறுவனங்களும், நுகர்வோர்களும் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை, டிஜிட்டல் பரிமாற்றமுறை வெகுவாக மாற்றியமைத்து வருகிறது. நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்த்து மின்னணு முறையில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள மத்திய அரசு மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.

ரிசர்வ் வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் யு.பி.ஐ மூலம் இரண்டு வங்கிக்கணக்குகளிடையே கைபேசி தளத்தின் மூலம் பணப் பரிமாற்றங்களை நொடிப்பொழுதில் செய்ய முடியும். அனைத்து டிஜிட்டல் பணப்பை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் யு.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது.

ஆன்லைன் வணிகம் வளர்ச்சியடைந்தபோது டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை வேகம் பெற்றது. டிஜிட்டல் பணப்பை நிறுவனங்கள், பல சலுகைகளை அறிவித்து தமது பணப்பைகளை சந்தைப் படுத்த செய்த முயற்சிகளும் இதற்கு உந்தம் கொடுத்தது. பணநீக்க நடவடிக்கைக்கு பின் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பணத்தட்டுபாட்டினால் இது வெகுவாக வளர்ச்சியடைந்தது. மேலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், டிஜிட்டல் வழியாக பணபரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டு மொத்த பரிவர்த்தனையில் 30 சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

கூகுள் போன்ற பிரம்மாண்ட நிறுவனங்களின் செயலிகளால், சிறிய டிஜிட்டல் பேமென்ட் செயலிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியும் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலிக்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளதால், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியால் இதர செயலிகள் முடங்காமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கருதப்படுகிறது.


Tags : government , 30% ceiling on transactions: Federal government imposes restrictions on digital transaction processors !!!
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்