தொண்டறத்தால் பொழுதளக்கும் தாய்க் கழகத் தலைவர்...!! திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி; தந்தை பெரியாரின் கரம் பற்றிக்  கொள்கைப் பயிற்சி பெற்று - பெரியார் பணி ஒன்றே தன் வாழ்வியலாகக்  கொண்டு - சமூகநீதிக் களத்தில் சமரசமற்ற போராளியாக - திராவிட இன உணர்வுச் சுடரொளியை அணையாமல் காக்கின்ற கைகளாக - அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் மிக்கவராக - முத்தமிழறிஞர் கலைஞரின் இளவலாக-தாய்க் கழகத்தின் தலைவராக - 88-ஆவது பிறந்தநாள் காணும் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்திய ஒன்றியத்திலும் - தமிழ்நாட்டிலும், ஜனநாயகமும் சமூகநீதியும் கடும் சவாலுக்குள்ளாகியிருக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில், அவற்றைத் தீரமுடன் எதிர்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையப் பாடுபடுவோம் எனத் தனது பிறந்தநாள் வாழ்த்துச்  செய்தியாக அறிவித்திருக்கும் ஆசிரியர் அய்யா அவர்களுக்குக் கழகத் தலைவர் என்ற முறையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகுத்தறிவுப் பார்வையுடன், திராவிட இன - மொழி உணர்வு குன்றாமல், தொண்டறத்தால் பொழுதளந்து, மானுட விடுதலைக்காக அயராது பாடுபடும் ஆசிரியர் அய்யாவின் வழிகாட்டலில், அவர் நோக்கத்தை மனதில் தேக்கி, உறுதியுடன் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

Related Stories: